Monday, January 25, 2010

சுவாமியும் நண்பர்களும் - 3

சாமியும் நானும் தெப்பக்குளத்தின் படிக்கட்டில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தோம். பரோபகாரம் குறித்து சமஸ்கிருதத்தில் ஏதோ பேசினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "குமார் கேரளால எங்கல இருக்கான்?" என்றான். குமார் ஆறாம் வகுப்பு வரை எங்களுடன் பயின்ற தோழன். ஒன்றிரண்டு வயது எங்களை விட மூத்தவன். அவனுடைய தந்தை துபாய் செல்ல பணம் கட்டி ஏமாந்ததால் அந்த கடனை அடைக்க இவன் படிப்பை விட்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்றான். 

"எர்ணாகுளம் சீமாட்டில" என்றேன். "சரி நீ வீட்டுக்கு போ ஒருத்தர்கிட்டையும் ஒண்ணும் சொல்லாத"  என்றான். "யாரும் மாட்டிவிட மாட்டாங்கடே" என்ற என்னை ஏளனமாக பார்த்தான்.
அங்கிருந்து நேராக அல்லிமூப்பன் தெரு நோக்கி சென்றேன். முஸ்தபா தெரு முனையில் நின்று கொண்டிருந்தான். மாட்டி கொண்டதற்கான எந்த கவலையும் அவன் மூஞ்சியில் இல்லை. "வாடே நேஷனல்ல போய் அல்வா சாப்டு போவோம்" என்றான் .அவன் அல்வா மிக்சர் சாப்பிட நான் டீ மட்டும் குடித்தேன். நாங்கள் அட்டகுளத்திற்கு சென்ற சிறிது நேரத்தில் விஜயும் வந்து சேர்ந்தான். "எல்லார்டையும் பேசிட்டென்ல, நம்ம ஒருத்தரையும் கூட்டி போக வேண்டாம். எப்டியும் நம்மள பிராக்டிகல் எழுத விட்டுதான் ஆவணும். அடுத்த வாரம் பிராக்டிகல் இருக்கு. இந்த வாரம் மாடல் பிராக்டிகல் வச்சாதான அடுத்த வாரம் பிராக்டிகல் வெக்க முடியும்" என்றான். அது சரி என்றே பட்டது. ஆனா ஒரு வாரம் டார்ச்சர் பண்ணுவாங்க என்று தோன்றியது.
 திட்டமிட்டபடி மறுநாள் அனைவரும் பள்ளிக்கு சென்றோம். எதிர்பார்த்தபடி ஒருவரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கபடவில்லை. ஹாஸ்டலில் சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் நின்றுகொண்டு பொழுதை போக்கினோம். ஜெயராஜ் சார் பல வழிகளில் துப்பறிந்து பார்த்தார். ஒருவரும் வாய் திறக்கவில்லை.


இரண்டு நாட்கள் இப்படியே ஓடின. மூன்றாவது நாள் ஜெயராஜ் சார் ஒரு புதிய குழப்பத்தை உருவாக்கினார். அரையாண்டுத் தேர்வு வரை அனைத்து பாடங்களிலும் பாஸ் ஆனவர்களுக்கு மட்டும் மாடல் பிராக்டிகல் என்றார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஏதும் திட்டமிடும் முன் ஜெயராஜ் சார் உள்ளே புகுந்து சிறு குழுக்களாக பிரிக்க ஆரம்பித்தார். பெயில் கும்பலை நோக்கி "நீங்கல்லாம் வீட்ல இருந்து யாரையாச்சும் கூட்டிட்டு வாங்கப்பா, கெளம்புங்க  " என்று தீர்க்கமாக கூறிவிட்டு சென்றார். நாங்கள் அரை மனதோடு லேப் நோக்கி சென்றோம். நாங்கள் உள்ளே சென்ற சில நொடிகளில் ஒரு உருவம் ஜெயராஜ் சாரின் அறை நோக்கி சென்றது.
அதன்பிறகு நடந்தது என் வாழ்வின் எந்த சூழலிலும் மறவாதது. இன்றளவிலும் என் தூக்கத்தை புரட்டிபோடும் நிகழ்வு அது. நானும் டார்வினும் லேப் மாடியின் வெளியே நின்றுகொண்டிருந்தோம். கீழே ஜெயராஜ் சார் கண்கள் சிவக்க என்னை நோக்கி "இங்க வா" என்றார். நான் முடிந்தது கதை என்று நினைத்து கொண்டு கீழே சென்றேன். "போய் மாரியப்பன் சாரை கூப்டு வா " என்றார். நான் போய் அவரை கூட்டி வரும் முன் பிரின்சிபாலும் அங்கே வந்து சேர்ந்திருந்தார். மாடியில் இருந்து சாமி இறங்கி நடந்துவந்து கொண்டிருந்தான். அவன் என்னை கவனிக்கவில்லை. அவன் இறங்கி வந்த உடன் பிரின்சிபால் அவனை கையால் அடிக்க ஆரம்பித்தார். அவன் தன்னுடைய கைகளால் முகத்துக்கு நேரே நீட்டி தடுத்துக்கொண்டிருந்தான். நாங்கள் அங்கே போய் சேர்ந்தவுடன் "ஒரு பிரம்பு எடுத்துட்டு வால" என்றார் ஜெயராஜ் சார். அப்போதுதான் சாமி திரும்பி என்னைப் பார்த்தான். பார்த்த அடுத்த நொடி பிரின்சிபாலின் அடியை தடுத்துக் கொண்டிருந்த அவனுடைய கைகளை கீழே போட்டான். அவன் கண்கள் சிவந்து என்னை நோக்கி நிலை குத்தி நின்றன. என்னையும் மாரியப்பன் சாரையும் ஒன்றாக கண்ட அவன் நான்தான் மாட்டிவிட்டேன் என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்டான். ஜெயராஜ் சாரும் மாரியப்பன் சாரும் சேர்ந்து அடித்த அடிகளை இமைகளை கூட இமைக்காமல் சிலை போல நின்று வாங்கி கொண்டிருந்தான். அந்த நொடி என்னுடைய கோழைத்தனம் சுயநலம் இரண்டும் என்னை அவனுக்காக ஏதும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தின. அடி என்றால் சாதாரண அடி அல்ல ஒவ்வொன்றும் எலும்பை நொறுக்கும் அடி. அடித்து ஒரு வேனில் தூக்கி போட்டு அவனை வீட்டிற்கு கூட்டி சென்றனர். மொத்த வகுப்பும் லேப் மாடியில் நின்று இதை பார்த்துகொண்டிருந்தது.


பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை விட்டபிறகும் சாமியை சென்று பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. ஒருநாள் அப்பாவுடன் கடையில் அமர்ந்திருந்த பொழுது சாமியின் தந்தை வந்து "சாமிய ரெண்டு நாளா காணும்பா. உன்கிட்ட எங்கயாச்சும் போறேன்னு சொன்னானாப்பா" என்று பதட்டத்தோடு கேட்டார்.  அவன் கேரளாவுக்குத்தான் போயிருப்பான் என்று தோன்றியது, சொன்னேன். அத்தோடு சாமி குறித்து எந்த தகவலும் இல்லாமல் போனது.
இது முடிந்து பல ஆண்டுகள் கடந்து நான் வேலையிலெல்லாம் சேர்ந்த பிற்பாடு ஒரு நாள் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற போது சாமியின் தந்தையைக் கண்டேன். அவரிடம் சாமி குறித்து விசாரித்த போது அவன் சூரத் நகரில் ஏதோ வேலை பார்ப்பதாகவும் தற்சமயம் 

விடுமுறையில் வந்திருப்பதாகவும் சொன்னார்.


அதே யோசனையுடன் தெப்பக்குளத்தின் அருகே வந்த பொழுது அங்கே படிக்கட்டில் அமர்ந்து சாமி யாரிடமோ சமஸ்கிருதத்தில் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான்.

சுவாமியும் நண்பர்களும் - 2

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு...நான் மெதுவாக டேபிளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள எத்தனித்தேன். சாமி தைரியமாக சென்று கதவை திறந்தான்.. வெளியே சபரியும், முத்துகண்ணனும் நின்று கொண்டிருந்தனர்.."என்னல செய்தீய.." என்று சபரி தலையை உள்ளே நீட்டினான்.."உள்ள வாங்கல " என்று ரகசியமாய் கூறி அவர்களை உள்ளே இழுத்தான் சுவாமி. நாங்கள் செய்த வேலைகளை ஆராய்ந்து பார்த்த சபரி "எனக்கும் கொஸ்டின் பேப்பர் குடுங்கல" என்றான்.

எங்கள் ஆட்டத்தில் அவர்களையும் சேர்த்துக்கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம். மூன்றாவது ரேங்க் மாணவனான சபரி பத்தாவது ரேங்கை நோக்கி சென்று கொண்டிருந்த காலம் அது.தன் மாணவ தோழிகளிடையே தன்னுடைய புகழை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. "சரிடே உனக்கும் தாரேன்" என்று கூறி விட்டு சுவாமி வெளியேற ஆயத்தமானான். உள்ளது உள்ளபடி செய்து விட்டு நாங்கள் வெளியேறினோம்.

சுவாமி நேராக சம்சுதீனை எழுப்பி அவன் கையில் வினாத்தாளை கொடுத்துவிட்டு கிளம்பினான். "ஒழுங்கா பாஸ் பண்ற வழிய பாருல" என்று கூறி விட்டு தூங்க சென்றான். "காலைல ஆறு மணிக்கு என்னைய எழுப்பிருலே" என்று கூறிவிட்டு தூங்க சென்றான். தினமும் அதிகாலையில் எழுந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான் அவன். நான் பொதுவாக தேர்வு கால விடுமுறைகளில் பகலில் மட்டுமே தூங்குவேன்.வினாத்தாள் கையில் கிடைத்த அடுத்த நொடியில் இருந்து சம்சுதீன் படிக்க தொடங்கி விட்டான். எனக்கு அதை எடுத்து படிக்கலாமா வேண்டாமா என்று இரண்டு மனதாக இருந்தது. சரி வேண்டாம் பாத்துகிடுவோம் என்று விட்டு விட்டேன். அடுத்த நாள் மொத்த ஹாஸ்டலும் வினாத்தாளை வைத்து படித்து கொண்டிருந்தது . சுவாமி அதை கண்டுகொள்ளவே இல்லை. இந்த சாகச செயல்கள் எல்லா பரிட்சைக்கும் தொடர்ந்தன.
ஒவ்வொரு பாடத்திலும் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றது கண்டு ஜெயராஜ் சார் பேரானந்தத்தில் இருந்தார்.எங்களுக்கு இன்று வரை ஏன் என்று புரிந்ததில்லை.அவர் எல்லா மாணவர்களையும் எல்லா பாடத்திலும் பாஸ் ஆகும் வரை விட மாட்டார். "இவர கெமிஸ்ட்ரிய மட்டும் பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்லுங்கடே " என்று டார்வின் கருவுவான்.

இப்படியாக போய் கொண்டிருந்த ரிவிஷன் தேர்வின் கடைசி பரிட்சையான வரலாறு பரிட்சை அன்றுதான் ஜெயராஜ் சார் எல்லோரையும் பேப்பரை வைத்து விட்டு வெளியே வர சொன்னார். என்ன ஆச்சு என்ற குழப்பத்தில் எல்லோரும் வெளியேறினோம். வெளியே தலை குனிந்தபடி சம்சுதீன் நின்று கொண்டிருந்தான். எனக்கு வயிறு ஏதோ செய்தது. டக்கென்று சுவாமியை பார்த்தேன். அவனோ வேண்டுமென்றே என்னை தவிர்த்து வேறு யாரிடமோ ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
"எனக்கு கணேஷ்ராஜா கணக்குல எழுவது மார்க் வாங்கும்போதே பொறி தட்டுச்சுலே" என்றார் அவனிடம். உண்மைதான், அதற்கு முன் கணக்கில் கணேஷ்ராஜாவின் அதிகபட்ச மதிப்பெண் இரண்டு.

அதெல்லாம் சரி இவன் எப்படி மாட்னான் என்று நாங்கள் யோசித்த வேளையில் அங்கே வந்த பியுன்

அண்ணாச்சி "சார் உங்கள பிரின்சிபால் சார் கூப்புடுறாங்க" என்றார் . எங்களை பார்த்து முறைத்து விட்டு சார் பிரின்சிபால் அறை நோக்கி சென்றார் சம்சுதீன் அருகே அமர்ந்திருந்த சபரியை கேட்டோம் என்ன

ஆச்சு என்று. "லூசு பயடா இவன் என்ன செஞ்சான் தெரியுமா?" என்று விளக்கினான். வினாத்தாள் கொடுக்கப்படும் முன்னே

ஆர்வகோளாறில் விடை எழுத ஆரம்பித்துவிட்டான் சம்சுதீன். அதுவும் ஒன் வேர்ட் கேள்விக்கெல்லாம் பதில் எழுதி இருக்கிறான்.

இன்னைக்கு செத்தோம் என்று நினைத்த வேளையில் மாரியப்பன் சார் உள்ளே நுழைந்தார். "என்னடே இங்க நிக்கிய ? பரீட்சை எழுதலியா?" என்றார். நான் திரு திருவென முழித்தேன். அப்போது ஜெயராஜ் சாரும் வந்தார். அவர் விஷயத்தை சொன்ன உடன் பொங்கி எழுந்து கண்ணில் கண்டவனை எல்லாம் புரட்டி எடுத்தார்.விஜயின் கண்ணாடி எங்கேயோ பறந்து நொறுங்கியது "எங்க இருந்துல கொஸ்டீன் எடுத்தீங்க ?" என்று கேட்டார். ஒருவரும் வாயை திறக்கவில்லை. "எல்லாரும் வீட்டுக்கு போயிட்டு பேரன்ட்ஸ கூடி வாங்க என்றார். நாங்கள் அப்படியே நின்று கொண்டிருந்தோம். அவர் நன்றாக திட்டிவிட்டு கிளம்பினார். நாங்க செய்வதறியாமல் ஹாஸ்டல் ரூமில் சென்று உக்காந்திருந்தோம். ஜெயராஜ் சார் ஒவ்வொருவராக கூப்பிட்டு விசாரித்து பார்த்தார். ஒருவரும் வாயை திறக்கவில்லை.

ஜெயராஜ் சார் கடுப்பாகி மதிய உணவு கொண்டு வந்த தாத்தாவிடம் ராத்திரி ஒண்ணும் பண்ண வேண்டாம் எல்லாரும் ஊருக்கு போறாங்க என்றார். மதியம் சாப்பிட்டு விட்டு அவரவர் ஊருக்கு கிளம்பினோம்.

நான், முஸ்தபா, விஜய் மூவரும் கடையநல்லூர் நோக்கி பேருந்தில் சென்றோம். சாமி எங்களோடு வரவில்லை. விஜய்தான் புலம்பிக்கொண்டே வந்தான். அவனுடைய அப்பா போலீஸ்காரர் , பயங்கர கண்டிப்பு. கண்ணில் கண்ணீர் பொங்க புலம்பிக்கொண்டிருந்தான். முஸ்தபா அவனை சமாதானபடுத்தி பார்த்தான் பயன் இல்லை. பேருந்து நிலையத்தில் இறங்கியதும் "நான் எல்லார்டையும் போன் போட்டு கேட்டு சாயங்காலம் என்ன பண்ணலாம்னு சொல்லுதேம்ல.. நீங்க ரெண்டு பேரும் ஏழு மணிக்கு அட்டகுளத்துக்கு வந்துருங்கல" என்று சொல்லிவிட்டு முஸ்தபா கிளம்பினான்.

நான் வீட்டிற்கு சென்று எதுவும் வாய் திறக்கவில்லை. சைக்கிளை எடுத்துக்கொண்டு சாமியின் வீடு இருக்கும் கிருஷ்ணாபுரத்தை நோக்கி அழுத்தினேன். அவன் பெரும்பாலும் ஆஞ்சநேயர் கோவிலில்தான் இருப்பான். நான் மெயின் ரோட்டில் இருந்து பார்த்த போதே ஆஞ்சநேயர் கோவிலில் அவன் தலை தெரிந்தது.

வயல்களுக்கு ஊடே அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயில் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான ஒரு இடம். என்னுடைய பள்ளி பருவத்தில் இப்பொழுது இருப்பது போல் அக்கோவில் சீரமைக்கப்படவில்லை. ஆனால் இப்போதைவிட அப்போது இருந்த கோவிலே என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக நினைவில் தேங்கி நிற்கிறது. என்னுடைய பதின்வயதுகளில் நானும் என் தந்தையும் ஞாயிறுதோறும் முற்போக்குக் கருத்துக்களை உரையாடிக்கொண்டு ஆஞ்சநேயர் கோயில் வரை நடந்து சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவோம்.

சாமியை பார்த்ததும் அவன் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்திருந்தது. "நாம மாட்டிகிட்டோம்" என்றான்.

Friday, August 28, 2009

சுவாமியும் நண்பர்களும் - 1

"எல்லாரும் பேப்பர கைல குடுத்துட்டு அப்டியே வெளில வாங்கல" என்றார் ஜெயராஜ் சார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாதிரி தேர்வு என்று ஒன்று, இல்லை இல்லை, மூன்று வைக்கப்படும்.அதில் மூன்றாவது மாதிரி தேர்வில்தான் இந்த கூத்து. இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அதுக்குள்ளையும் எதுக்குல கூப்புடுதாரு? என்று எண்ணியபடி பேப்பரை குடுத்துவிட்டு கிளம்பினோம். வெளியே வந்தால் சம்சுதீன், சார்வாள் முன் தலையை கவிழ்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

பத்தாம் வகுப்பு மாணவர்களும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் கண்டிப்பாக விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பது எங்கள் பள்ளியின் நியதி. சரி விடுதி என்றால் ஏதோ ரெண்டு பேருக்கு ஒரு அறை என்றெல்லாம் இல்லை. மொத்தம் ஒரே ஒரு அறைதான். அங்கே எல்லோரும் தங்களுடைய உடைமைகளை வைத்துவிட்டு இரவில் ஏதேனும் ஒரு வகுப்பறையில் படுத்து கொள்வோம். குளிப்பதற்கு ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்கபட்டிருக்கும், கழிப்பதற்கு கண்மாய். பெண்கள் விடுதி பரவாயில்லை அவர்களுக்கு சகல வசதியும் உண்டு.

சுவாமி பொதுவாகவே நண்பர்களுக்காக எதையும் செய்பவன். ஒரு சனிக்கிழமை காலை குளிக்கையில்தான் அவன் இடுப்பில் தொங்கும் பெரிய சாவிக்கொத்தை கண்டேன். விடுதியில் சனிக்கிழமை காலை குளிக்கும் பழக்கம் எங்கள் இருவருக்கும் மட்டுமே உண்டு. "என்னடே சாவி?" என்று வினவினேன். "ஒண்ணுமில்லலே நம்ம சம்சுதீன் ரெண்டு ரிவிசன் டெஸ்ட்லயும் எல்லா பாடத்துலையும் பெயில் தெரியும்லா" என்றான். "அதுக்கு இப்ப என்னலே? நீ என்ன செய்ய போற?" "இல்லடே அவன் இந்த தடவை எல்லா பாடத்துலையும் பாஸ் பண்ணாட்டி பப்ளிக் எழுத விடமாட்டேன்னு ஜெயராஜ் சார் சொல்லியிருக்காரு , அதான் இன்னைக்கு ராத்திரி பிரின்சிபால் ரூம்ல பூந்து கொஸ்டின் பேப்பர ஆட்டைய போட போறேன் நீயும் வாரியா? " என்றான். "மாட்டுனா சங்கு ஊதிருவாங்கடே " . "அதெல்லாம் மாட்டாம எப்டி எடுக்கணும்னு எனக்கு தெரியும் நீ வாரியா வரலையா? " ." சேரி போவோம்" என்று சொல்லி தொலைத்தேன்.

அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு பூட்டை திறப்பதாய் உத்தேசம். ஒன்பது மணிக்கு மாரியப்பன் சார் ரவுண்ட்ஸ் வருவார். வந்துவிட்டு பதினோரு மணிக்கு கிளம்பி போய் விடுவார். அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் தூங்கி விடுவர். இதில் பெரும் இடர் யாதெனில் பன்னிரெண்டாம் வகுப்பு அண்ணன்கள். என்னவோ எல்லோருமே எம்.பி.பி.எஸ். ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் படித்து கொண்டிருப்பர்.

பன்னிரண்டு மணிக்கு நானும் சுவாமியும் முதல் மாடியில் இருந்த ஆறாம் வகுப்பில் இருந்துகொண்டே எதிரில் இருந்த பிரின்சிபால் அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம். பிரின்சிபால் அறையின் வாசலில் அமர்ந்து கொண்டு ஆறுமுகச்சாமி அண்ணன் "Chloroplasts are the actual sites for photosynthesis" என்று இருநூறு முறை கூவி கொண்டிருந்தார்.

இவர் தூங்குதமாறி தெரியலையேடே என்று எண்ணியபடி படிக்கட்டில் மெதுவாக இறங்கலாம் என்று போனால் வாசலில் ஆறுமுகசாமியின் பரம வைரி செந்தில் அண்ணன் உக்காந்து பாதி தூக்கத்தில் "rate of reaction increases with increase in temperature" என்று காற்றில் படம் வரைந்து கொண்டிருந்தார். சாமி திடீரென்று " எலே மாரியப்பன் சார் நெசம்மாவாடே படத்துக்கு பேட்டு இங்க வாரேன்னு சொன்னாரு " என்றான். அது என்னவென்று புரிந்து நான் சுதாரிப்பதற்குள் செந்தில் அண்ணா எங்களை நோக்கி "முதல்லே சொல்ல கூடாதாடே அவர் பன்னெண்டு மணிக்கு மேல நாங்க முழிச்சிருக்கத பாத்தா கொன்னே போட்டுருவாரு" என்று கூறி விட்டு வேகமாக புத்தகத்தை மடித்து வைத்து விட்டு ஆறுமுகசாமியை நோக்கி சென்று விஷயத்தை கூறினார். அவர் நம்பாமல் எங்களிடம் கேட்டார். நான் ஆம் என்று தலையசைத்த பின்னர் அவரும் தூங்க சென்றார்.

நானும் சுவாமியும் சிறிது நேரம் தூங்குவது போல் நடித்து சுமார் அரைமணி நேரம் கழித்து வந்து பூட்டை திறந்தோம். சுவாமிநாதன் ஏற்கனவே அந்த பூட்டு எண்ணை ஆராய்ந்து வைத்திருந்தான். அது ஆல்பா பூட்டு எனவே சாவி கிடைப்பது எளிது என்று பின்னொரு நாள் கூறினான். அவனிடம் ஒரு சாவி லைப்ரரியே இருந்தது. உள்ளே புகுந்த நாங்கள் உள்வழியாக கதவை சாத்திவிட்டு தயாராக வைத்திருந்த மெழுகுவர்த்தியை ஏற்றினோம். டேபிளில் இருந்த குடுவையின் உள்ளே ஒரு சாவிகொத்து இருந்தது.

அதில் இருந்து ஒவ்வொரு சாவியாக எடுத்து டிராயரை திறக்க முயன்றோம். நான்காவது முயற்சியில் திறந்தது. உள்ளே கை விட்டு துழாவி ஒவ்வொரு கட்டாக ஆராய்ந்தோம். அந்த வாரம் தேர்வு நிகழும் மூன்று பாடங்களுக்கு மட்டுமே வினாத்தாள் இருந்தது. ஒவ்வொரு கட்டும் ஒரு பாலிதீன் பையில் சுற்றபட்டிருந்தது. ஒரே ஒரு விரல் மட்டும் உள்ளே நுழையும் அளவிற்கு அந்த பாலிதீன் பையில் துளையிட்டு , ஒரு விரலை உள்ளே நுழைத்து ஒரே ஒரு வினாத்தாளை மட்டும் விரலால் சுருட்டி வெளியே எடுத்தான் சுவாமி. நான் வாய்பிளந்து நின்றேன். எடுத்த வினாத்தாளை என்னிடம் கொடுத்து பத்திரப்படுத்த சொன்னான்.

இவ்வாறு ஒவ்வொரு கட்டில் இருந்தும் ஒரு வினாத்தாள் எடுத்த பின்னர் மெழுகுவர்த்தி நெருப்பில் அத்துளைகளை வாட்டி அடைத்தான். நான் இதற்குள் பயத்திலும் வேர்வையிலும் குளித்திருந்தேன். எல்லாவற்றையும் இருந்த இடத்தில் வைத்துவிட்டு "அவ்வளவுதாண்டே" என்று மெழுகுவர்த்தியை அணைத்த அடுத்த நொடி..........................கதவு தட்டப்பட்டது...

Saturday, August 1, 2009

பெரியசாமி கோயில்

முந்தலுக்கு செல்லும் பாதை எங்கள் பள்ளியை ஒட்டியே இருந்தது. நாங்கள் கிளம்பிய வேளையில் பள்ளியில் ஒருவரும் தென்படவில்லை. மிகவும் குறுகிய அந்த கரடுமுரடான பாதையில் சைக்கிளில் சென்றது எனக்கு புது அனுபவமாக இருந்தது. கண்ணனுக்கோ வேதனையாக இருந்தது. அவன்தானே சைக்கிள் மிதித்தான். அவனை வைத்து மிதிக்கும் அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை. ராஜேந்திரனும் ராஜாவும் மற்றொரு சைக்கிளில் மாறி மாறி ஒட்டி வந்தனர்.
முந்தலை சென்று அடைந்ததும் சிறிது இளைப்பாறி கொண்டோம். அது கோடை காலம் ஆதலால் முந்தலில் மிகவும் குறைவாகவே தண்ணீர் கொட்டியது. "பெரியசாமி கோயில்ல இன்னும் நெறைய தண்ணி ஓடும்டே" என்றான் ராஜா... கொஞ்சம் புளியங்காய் அடித்து தின்றுவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு கிளம்பினோம். முந்தல் தாண்டி சிறிது தூரம் வரை சைக்கிளில் செல்ல முடியும் என்று அங்கே ஒரு வயசாளி கூறினார்.

அது ஒரு ஒத்தையடி பாதை போல இருந்தது. ஒரு புறம் புதர் செடிகள் மறு புறம் பள்ளத்தாக்கு என்று திகிலாக இருந்தது அந்த பாதை.கண்ணன் நேர்த்தியாக சைக்கிள் ஓட்டினான்.ஒரு இடத்தில் பாதை முடிவுற்று சில வீடுகள் தென்பட்டன.அந்த வீடுகள் இருந்த இடத்தின் முகப்பில் "தமிழ்நாடு ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது" என்று எழுதி இருந்தது. "எலேய் இவங்க காட்டுவாசில்லா... இங்க நம்மள பிடிச்சு வச்சுருவாங்கடே" என்றான் கண்ணன். "அதெல்லாம் ஒண்ணும் செய்யமாட்டாக.. நம்மள விட இவுகதான் நல்லவக" என்றான் ராஜேந்திரன்..நாங்கள் அங்கு ஒரு வீட்டின் அருகே சென்று "சைக்கிளை இங்க நிறுத்திக்கிடுதோம்" என்று சொன்ன போது உள்ளே சாப்பிட்டு கொண்டு இருந்தவர் "எங்க வந்தீய? கஞ்சி குடிக்கியளா?" என்றார். "வேண்டாம் நாங்க பெரியசாமி கோயிலுக்கு வந்தோம்" என்றேன். "அப்டியா அப்டீன்னா இந்த தீப்பெட்டியும் சூடனும் எடுத்துட்டு போங்க.. போய் சூடம் ஏத்தி கும்பிட்டுட்டு வாங்க" என்றார். சரி என்று வாங்கி கொண்டேன்.

அங்கிருந்து சுமார் ஒரு மைல் தூரம் நடந்து சென்ற பின் எங்கள் கண் முன்னே விரிந்தது ஒரு கண்கொள்ளா காட்சி.. ஒரு பொட்டு வெயில் கூட நுழைய விடாமல் அடர்ந்த மரங்கள், அதற்கு நடுவே துள்ளிக் குதித்தோடும் ஒரு சிறிய ஆறு. அதை பார்த்த அந்நேரத்தில் நாங்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை..வேகமாக உடைகளை களைந்து விட்டு நீரில் குதித்தோம்..ஆற்றில் மீன்கள் வேறு எக்கச்சக்கமாக மிதந்தன.. நன்றாக குளித்த பிறகு பசி வயிற்றை கிள்ளியது...போட்டி போட்டு கொண்டு புரோட்டாவை காலி செய்தோம்..சிறிது நேரம் அங்கே விளையாடி விட்டு செல்லலாம் என்று நினைத்த போது "நாம மீன் பிடிச்சு சுட்டு தீம்போமா" என்றான் ராஜேந்திரன்.

ஒரு துண்டை எடுத்து அதன் இருபுறமும் ஆளுக்கு ஒருவராக நானும் ராஜாவும் பிடித்து கொண்டோம்.. கண்ணனை சுள்ளி பொறுக்கி வர சொல்லி விட்டு ராஜேந்திரன் மீனைச்சுட ஒரு இடம் தேர்ந்தெடுத்தான்.. ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறை இருந்தது.. அதன் மீது ஒரு காய்ந்த மரம் சாய்ந்து கொண்டு நின்றது...அந்த பாறையில் அமர்ந்து மீனை சூட தயார் ஆனான் ராஜேந்திரன்.. முதல் பிடியில் மூன்று மீன்கள் சிக்கின.."கொண்டாடே எப்டி இருக்குனு பாப்போம்" என்றான் ராஜேந்திரன்.அதற்குள் சிறிதாய் தீ வளர்த்திருந்தான் அவன்.
சிறிய மீனின் கழுத்தை திருகி தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்தான்..பின்னர் ஒரு குச்சியில் அதை குத்தி லேசாக தீயில் வாட்டினான்..அதற்குள் அந்த குச்சி தீப்பிடித்து எரிந்தது.."நான் கீழ போய் எதாச்சும் கம்பியும் உப்பும் முளவாத்த பொடியும் வாங்கிட்டு வாரேன்" என்று சொல்லி விட்டு ராஜேந்திரன் சென்றான். "அவன் சென்ற பிறகு தீ எரிக்கும் வேலையை கண்ணன் ஆரம்பித்தான்.. அப்போது ஆரம்பித்தது வினை.. சிறு சிறு குச்சிகளாய் ஆரம்பித்து மெதுவாய் பெரிய தடிகளை தீயினுள் எறிந்தான் புரோட்டா தின்ன கண்ணன்.
தீ மள மளவென பற்றி எரிந்தது.

நானும் ராஜாவும் காட்டுக்குள் சிறிது தூரம் நடக்க சென்றோம் ஆங்காங்கே யானைச்சாணம் தென்பட்டது..ஒரு இடத்தில் இருந்த சாணத்தை பார்த்து "இப்பந்தாம்ல போட்டு போயிருக்கு" என்றான் ராஜா. ஆம் அதில் புகை பறந்து கொண்டிருந்ததை பார்த்து பதறி."ஏலே அப்பம்னா அது இங்கதான எங்கயாச்சும் இருக்கும்" என்று நான் மெதுவாக வந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.. அவன் என்னை முந்திக்கொண்டு ஓட ஆரம்பித்தான்...ஓட்டமாய் ஓடி கண்ணன் இருந்த இடத்தை அடைந்த போது அங்கே ஒரு பெரும் பிரளயமே காத்து இருந்தது. அவன் பற்ற வைத்த நெருப்பு அந்த பாறையின் மீது சாய்ந்து நின்ற பெரிய காய்ந்த மரத்திலும் பற்றி கொண்டது. சிறிய மலை போல் தீ மள மளவென எரிந்து கொண்டிருந்தது.கண்ணன் கையை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்."எங்கல போனீய?"என்றான்.நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். அந்த மரத்தை சுற்றி மேலும் பல காய்ந்த மரங்கள் இருந்தன..அது வரை அவ்வளவு பெரிய தீயை நாங்கள் பார்த்ததே இல்லை.இந்த நெருப்பு தொடர்ந்தால் காட்டையே அழித்துவிடும் என்று தோன்றியது..இதற்குள் ராஜேந்திரனும் வந்து சேர்ந்திருந்தான்.."கெடுத்துபுட்டியே கதைய" என்றான் கண்ணனை நோக்கி..நாங்கள் என்ன செய்வதென்று கையை பிசைந்து கொண்டிருந்தோம்.

ராஜேந்திரன் வேகமாக ஓடி சென்று ஆதிவாசிகள் குடியிருப்பில் கண்ட அந்த பெரியவரை அழைத்து வந்தான். "என்ன வேலைய்யா பாத்து வெச்சுருக்கீக" என்று புலம்பிகொண்டே அந்த நெருப்பின் அருகே சென்றார்..சில வினாடிகள் யோசித்து விட்டு மரத்தின் அடிப்பாகத்துக்கு அருகே சென்றார்.அதை சுற்றி இருந்த சருகுகளை ஒரு பெரிய கம்பால் விலக்கிவிட்டு மெதுவாய் அந்த மரத்தின் அடிப்பாகத்தை லேசாக தள்ள முயற்சித்தார்..எங்களால் அதன் அருகில் கூட செல்ல ஏலவில்லை.வெக்கை கடுமையாக இருந்தது. அவர் முழு மூச்சுடன் மரத்தை தள்ளினார் அது மெதுவாக உருண்டு ஆற்றுக்குள் பெருத்த சத்தத்துடன் விழுந்தது.. சிறிது நேரம் மூண்ட புகையில் எங்களுக்கு கண்ணே தெரியவில்லை.கொஞ்ச நேரத்தில் புகையும் நெருப்பும் அடங்கி அந்த இடமே நிசப்தமானது போல தோன்றியது.

"உங்க யாருக்கும் கை பொக்கலல்லா?" என்றார் அவர்..கண்ணனுக்கு மட்டும் லேசாக கையில் சூடுபட்டிருந்தது. அவனை கூட்டிப்போய் ஏதோ பச்சிலை அரைத்து கையில் கட்டி விட்டார். எனக்கு எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது போல் இருந்தது.
ஏதோ ஒரு இனம்புரியாத மௌனம் எங்களிடையே புகுந்திருந்தது.அங்கிருந்து சைக்கிள் எடுத்துக்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பினோம்.கண்ணனை பின்னால் உட்கார வைத்து நான் ஒட்டி கொண்டு வந்தேன். நல்ல இறக்கம் ஆதலால் சுளுவாக ஒட்டி கொண்டு வந்தேன். அதன் பிறகு நாங்கள் முந்தலுக்கு போகவே இல்லை.

Saturday, July 25, 2009

The journey begins...

"நாளைக்கு பெரியசாமி கோயிலுக்கு போவலாமா?" என்றான் ராஜா. "அது எங்கலே இருக்கு?" என்றேன் நான். "அது முந்தல் மலைக்கு மேல இருக்குடே" என்றான் பின் சீட்டில் இருந்து ராஜேந்திரன். எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது மேற்குத்தொடர்ச்சி மலை. அதில் ஒரு குன்றுதான் முந்தல் மலை. அதற்கு முன்பு பல முறை முந்தல் மலைக்கு சென்றிருக்கிறோம். ஒரு முறை கெமிஸ்ட்ரி ஹோம் வொர்க் எழுதாமல் வந்ததால் நானும் ராஜேந்திரனும் காலையிலேயே கிளம்பி முந்தலுக்கு போய் குளித்து கொண்டாடிவிட்டு கிளம்பி வீட்டுக்கு போனோம்.
மேற்கு தொடர்ச்சி மலைக்குள் அதைத்தாண்டி நான் சென்றதில்லை.
"நான் ஒரு தடவை போயிருக்கேம்ல சூப்பரா இருக்கும் " என்றான் ராஜா. "ஆனா அதுக்கு முந்தல் வரைக்கு சைக்கிள்ல பேட்டு அங்கேருந்து நடந்து போணும்டே " என்றான் ராஜேந்திரன் . "ஓங்கிட்ட துட்டு இருக்கா? " என்று கேள்வி என்னை நோக்கி திரும்பியது. "எதுக்குலே? சைக்கிளுக்கா ?".. "சைக்கிளுக்கு வேணும் பெறவு திங்க எதாச்சும் வாங்கிட்டு போணும்லா ".."ஆமா அங்க போய் குளிச்ச பெறவு தீயா பசிக்கும்லே ".. "இத வீட்ல சொல்லி துட்டு கேட்டா எங்கம்மா கொன்றுவா.. நான் வேணும்னா ரொட்டி வாங்கியாறேன்டே எங்க ஊரு சென்ட்ரல்ல ரொட்டி-சால்னா சூப்பரா இருக்கும் நம்ம நாலுவேறு தான? பன்னெண்டு புரோட்டா வாங்கியாறேன்" என்றேன். "சேரி அப்டின்னா சைக்கிளுக்கு நாங்க காசு போடுதோம்" என்று ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம்.அதன் பிறகு அவர்கள் தங்கள் முந்தய பயணத்தின் வீர பிரதாபங்களை சிலாகித்து பேசிக்கொண்டு இருந்தனர். நான் பன்னெண்டு புரோட்டாவுக்கு எப்படி அடி போடுவதென்று யோசித்து கொண்டிருந்தேன். மறு நாள் காலை ஏழுமணிக்கே கிளம்பி விட்டேன். "ஏலே நீ பள்ளிக்கூடம் போவ ஆரம்பிச்ச நாள்ல இருந்து ஏழு மணிக்கு இன்னைக்குதாம்ல கெளம்பி இருக்க.." என்றாள் அம்மா... கிளம்புவதற்கு முன் என் பழைய டவுசருக்குள் ஏதேனும் காசு இருக்குமா என்று தேடி கொண்டிருந்தேன். "என்னத்துக்குல இப்டி தட்டளிஞ்சிகிட்டு கெடக்க " என்றாள் அம்மா .. "
"திங்க எதாச்சும் இருக்கா? " என்றேன். "ஏழு மணிக்கு நான் என்ன செய்யட்டும் என்றாள். "அப்டின்னா நான் போம்போது ரொட்டி வாங்கிட்டு போறேன் " என்றேன். "செத்த இரு உங்கப்பா வயலுக்கு பேட்டு வந்த பெறவு வாங்கி தாரேன். என்ன கொள்ளையா போவுது" என்றாள். "நான் சீக்கிரம் போணும் இல்லாட்டி ரிகர்சல் ஆரம்பிச்சுருவாங்க" என்று புலம்பினேன். உடனே எங்கிருந்தோ தேடி கொஞ்சம் சில்லரையாக கொண்டு வந்து கொடுத்தாள்.மொத்தம் பத்துரூபாய் ஐம்பது காசு தேறியது.
அவசர அவசரமாக கிளம்பி பஸ் ஸ்டாண்ட் சென்றேன்.பஸ் ஸ்டாண்டின் (ஆஸ்பத்திரி ஸ்டாப்) அருகில்தான் சென்ட்ரல் புரோட்டா ஸ்டால் இருந்தது. அங்கே சென்றால் அப்போதுதான் புரோட்டா போட மாவு பிசைந்து கொண்டிருந்தார் இல்லியாஸ் அண்ணாச்சி. சேரி இது வேலைக்கு அவாது என்று எண்ணியபடி புளியங்குடி பஸ்ஸை பிடித்தேன்.
திட்டமிட்டபடி எல்லோரும் 7:45 க்கு புளியங்குடி கட்டபொம்மன் பஸ் டிப்போ அருகே குழுமினோம். மொத்தம் முப்பத்தி இரண்டு ரூபாய் தேறியது . இரண்டு சைக்கிள் வாடகைக்கு எடுப்பதாக திட்டமிட்டோம்...
"ஆள் தெரியாட்டி ஒருத்தரும் சைக்கிள் தரமாட்டாங்க " என்றான் ராஜேந்திரன்...."பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு கடை எனக்கு தெரியும்ல..அது எங்க தாத்தா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கடைதான் ..." என்றான் ராஜா... "அது ஒரு மைல் தூரம்லாடே இருக்கு.. பஸ்ல போனா துட்டும் காணாது.. வா நடந்து போவோம் நம்ம ரெண்டு பெரும் போய் எடுத்துட்டு வருவோம், மீதி துட்டுக்கு இவங்க ரெண்டுபேரும் போய் ரொட்டி வாங்கிட்டு வரட்டும்...வெள்ளதுரைல போய் வாங்குங்கடே அங்கதான் நெறையா சால்னா குடுப்பான்" என்று அவர்களிடம் சொல்லும்போது, "நீங்க நேத்தே சொல்லி இருந்தா நான் சுங்காமுத்துல வாங்கிட்டு வந்திருப்பேன்டே, அங்கதான் சால்னா சூப்பரா இருக்கும்" என்றான் கண்ணன்...காலை வெயில் தார் ரோட்டை ஏற்கனவே உருக வைத்திருந்தது... ராஜா செருப்பு அணிந்திருக்கவில்லை.. நானும் அவனும் மாறி மாறி என்னுடைய செருப்பை போட்டு கொண்டு சென்றோம்...புளியங்குடி பஸ்ஸ்டாண்ட் அருகே ஒரு சைக்கிள் கடையில் நாள் வாடகைக்கு ரெண்டு சைக்கிள் (அரை வண்டி) எடுத்துக் கொண்டோம்... சத்தியமாக அன்றுதான் ரோட்டில் இடது பக்கம் சைக்கிள் ஒட்டி செல்ல வேண்டும் என்று எனக்கு தெரியும்...ராஜாதான் சொன்னான்...ராஜாவை என்னுடன் அழைத்து சென்றதில் வேறோர் சூட்சுமமும் இருந்தது. ராஜாவையும் கண்ணனையும் புரோட்டா வாங்க அனுப்பியிருந்தால் புரோட்டாவை நாங்கள் வருவதற்குள் காலி செய்திருப்பார்கள்...
கண்ணனும் ராஜேந்திரனும் புரோட்டாவுடன் ரெடியாக இருந்தனர்... பெரியசாமி கோயில் நோக்கிய எங்கள் பயணம் இனிதே துவங்கியது..

Friday, July 24, 2009

ஆண்டு விழா

அப்பொழுது நான் ஏழாவது படித்ததாக நினைவு. எங்கள் ஊரிலிருந்து 15 கி. மீ தூரத்தில் உள்ள புளியங்குடியில் உள்ள பள்ளியில்தான் நான் பயின்று வந்தேன். தூர்தர்ஷனின் ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை தமிழ் படங்கள், திருவிழாக்காலங்களில் 16 mm திரைப்படங்கள் (ஒவ்வொரு திருவிழாவிற்கும் இரண்டு திரைப்படங்கள் ஒரு பக்தி படம் ஒரு பாக்யராஜ் படம்! ) ஆகியவற்றை தவிர்த்து எங்கள் கலை தாகத்தை தீர்த்துக் கொள்ள ஒரே வடிகால் எங்கள் பள்ளியின் ஆண்டுவிழா.

அதற்கு ஆள் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய வேலை. 'கரகாட்டக்காரன்' பாட்டுக்கு ஆடுவதற்கு முதலில் மலாக்கி சார் அழைத்து சென்று 'மாங்குயிலே பூங்குயிலே' பாட்டுக்கு என்னை ஆட சொன்னார். நானும் பாடல் ஆரம்பித்தத்தில் இருந்து இரண்டு கைகளையும் தூக்கி இறக்கி ஒரே ஸ்டெப்பை போட்டு கொண்டிருந்தேன் (18 முறை என்று பாண்டி சொன்னான்). சரி இது வேலைக்கு ஆவாது என்று குழு நடனம் ஆடும் அணிக்கு என்னை அனுப்பி வைத்தார். அங்கு ஏதோ ஒரு ரஜினிகாந்த் பாட்டிற்கு ஆடி பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து ஆடினேன். அன்றைய பயிற்சி முடிந்து வெளியே செல்லும் முன் பத்மா மிஸ் என்னை கூப்பிட்டு "சிவப்பு சட்டை வாங்குறதுக்கு நாளைக்கு 75 ரூவா கொண்டு வந்துரு" என்றார்கள். "75 ரூவாயா? 75 பைசா கூட கெடயாது" என்றார் எங்கப்பா. சரி போகுது இந்த வருஷமும் நாடகத்திலேயே நடிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன்.

படிப்பில் படுகெட்டி என்று ஆரம்பித்து சராசரி மாணவன் என்ற பட்டத்தை நோக்கி நான் பயணிக்க ஆரம்பித்த காலம் அது. ஆண்டுதோறும் நாடகங்களில் முக்கிய வேடம் என்று ஆரம்பித்து , தேய்ந்து ஒன்பதாம் வகுப்பில் ஒரு ஆங்கில நாடகத்தில் சேவகனாக ஒரே ஒரு காட்சியில் வந்து சென்றேன். முதல் ரேங்க் மாணவனே முக்கிய நாயகன் என்னும் வினோத பழக்கத்தை கொண்டிருந்தது எங்கள் பள்ளி. எட்டாம் வகுப்பில் மொத்தமாய் பன்னிரெண்டு கிலோ இருந்த எனக்குத் தளபதி வேடம் கொடுத்தனர். பெரியதாக மீசை வேறு. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சுனா பானா போல் இருந்திருக்கிறேன். அந்த வருடம் (ஏழாம் வகுப்பு) ஆண்டு விழா நாடகத்தில் நானும் ராஜாவும் முக்கிய வேடம் ஏற்றிருந்தோம். ராஜா பணக்கார ஊதாரி தந்தை, நான் அவரை திருத்தும் ஒழுக்க புத்திரன். ஆண்டு விழா அன்று பள்ளி விடுமுறை. எங்கள் அனைவரையும் பயிற்சிக்காக காலையிலேயே வர சொல்லி இருந்தனர். அதற்கு முந்தைய நாள்தான் நானும் ராஜாவும் ஒரு திட்டம் தீட்டினோம்.

முன்னோட்டம்

ஒவ்வொரு பண்பட்ட மனிதனும் தான் இடம்பெயரும் பொழுது தன்னுடன் தான் வசித்த இடத்தின் நினைவுகளையும் கலாசாரத்தின் சுவடுகளையும் சுமந்தே செல்கிறான். காலப்போக்கில் தான் வசிக்கும் இடத்திற்கும் வசித்த இடத்திற்கும் ஏற்படும் இடைவெளி விரிந்து கொண்டே செல்கிறது. ஒரு நாகரீகத்தின் பிம்பம் மற்றொரு இடத்தில் ஏதேனும் ஓர் வகையில் பிரதிபலிப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர். மதுரை பற்றி எரியும் முன்னர் அங்கிருந்து புலம்பெயர்ந்தோர் கேரளத்தின் ஓர் பகுதியில் குடியேறி வாழையடி வாழையாக (தென்னையடி தென்னையாக) வாழ்ந்து வருவதாகவும், இருவருக்கும் இடையே நிலவும் பல்வேறு கலாசார ஒற்றுமைகள் இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நான் வசித்து, சுவாசித்து, வாழ்ந்த மண்ணின் நினைவுகளையும், சந்தித்த மனிதர்களின் சுவடுகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், அடடா இது என் இளம்பிராயம் போல் உள்ளதே என்று உங்களை உங்களுக்கே நினைவுபடுத்தவும் என் சிறு முயற்சி இது. இதை படிக்கும் ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் பழைய நண்பனையோ , உங்கள் பெற்றோரின் கைகோர்த்து நடந்த நாட்களையோ நீங்கள் நினைவுகூர்ந்தால் அது என் எழுத்தின் வெற்றி.

நான் பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் என்னும் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஓர் ஊர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் முகில் கூட்டங்கள் முடியும் இடத்தில் துவங்கும் ஓர் அற்புத உலகம் அது. என் நினைவுகளின் ஊடே நான் நடந்து உங்களையும் நடத்தி செல்லும் போது இது குறித்து மேலும்...