Friday, August 28, 2009

சுவாமியும் நண்பர்களும் - 1

"எல்லாரும் பேப்பர கைல குடுத்துட்டு அப்டியே வெளில வாங்கல" என்றார் ஜெயராஜ் சார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாதிரி தேர்வு என்று ஒன்று, இல்லை இல்லை, மூன்று வைக்கப்படும்.அதில் மூன்றாவது மாதிரி தேர்வில்தான் இந்த கூத்து. இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அதுக்குள்ளையும் எதுக்குல கூப்புடுதாரு? என்று எண்ணியபடி பேப்பரை குடுத்துவிட்டு கிளம்பினோம். வெளியே வந்தால் சம்சுதீன், சார்வாள் முன் தலையை கவிழ்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

பத்தாம் வகுப்பு மாணவர்களும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் கண்டிப்பாக விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பது எங்கள் பள்ளியின் நியதி. சரி விடுதி என்றால் ஏதோ ரெண்டு பேருக்கு ஒரு அறை என்றெல்லாம் இல்லை. மொத்தம் ஒரே ஒரு அறைதான். அங்கே எல்லோரும் தங்களுடைய உடைமைகளை வைத்துவிட்டு இரவில் ஏதேனும் ஒரு வகுப்பறையில் படுத்து கொள்வோம். குளிப்பதற்கு ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்கபட்டிருக்கும், கழிப்பதற்கு கண்மாய். பெண்கள் விடுதி பரவாயில்லை அவர்களுக்கு சகல வசதியும் உண்டு.

சுவாமி பொதுவாகவே நண்பர்களுக்காக எதையும் செய்பவன். ஒரு சனிக்கிழமை காலை குளிக்கையில்தான் அவன் இடுப்பில் தொங்கும் பெரிய சாவிக்கொத்தை கண்டேன். விடுதியில் சனிக்கிழமை காலை குளிக்கும் பழக்கம் எங்கள் இருவருக்கும் மட்டுமே உண்டு. "என்னடே சாவி?" என்று வினவினேன். "ஒண்ணுமில்லலே நம்ம சம்சுதீன் ரெண்டு ரிவிசன் டெஸ்ட்லயும் எல்லா பாடத்துலையும் பெயில் தெரியும்லா" என்றான். "அதுக்கு இப்ப என்னலே? நீ என்ன செய்ய போற?" "இல்லடே அவன் இந்த தடவை எல்லா பாடத்துலையும் பாஸ் பண்ணாட்டி பப்ளிக் எழுத விடமாட்டேன்னு ஜெயராஜ் சார் சொல்லியிருக்காரு , அதான் இன்னைக்கு ராத்திரி பிரின்சிபால் ரூம்ல பூந்து கொஸ்டின் பேப்பர ஆட்டைய போட போறேன் நீயும் வாரியா? " என்றான். "மாட்டுனா சங்கு ஊதிருவாங்கடே " . "அதெல்லாம் மாட்டாம எப்டி எடுக்கணும்னு எனக்கு தெரியும் நீ வாரியா வரலையா? " ." சேரி போவோம்" என்று சொல்லி தொலைத்தேன்.

அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு பூட்டை திறப்பதாய் உத்தேசம். ஒன்பது மணிக்கு மாரியப்பன் சார் ரவுண்ட்ஸ் வருவார். வந்துவிட்டு பதினோரு மணிக்கு கிளம்பி போய் விடுவார். அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் தூங்கி விடுவர். இதில் பெரும் இடர் யாதெனில் பன்னிரெண்டாம் வகுப்பு அண்ணன்கள். என்னவோ எல்லோருமே எம்.பி.பி.எஸ். ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் படித்து கொண்டிருப்பர்.

பன்னிரண்டு மணிக்கு நானும் சுவாமியும் முதல் மாடியில் இருந்த ஆறாம் வகுப்பில் இருந்துகொண்டே எதிரில் இருந்த பிரின்சிபால் அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம். பிரின்சிபால் அறையின் வாசலில் அமர்ந்து கொண்டு ஆறுமுகச்சாமி அண்ணன் "Chloroplasts are the actual sites for photosynthesis" என்று இருநூறு முறை கூவி கொண்டிருந்தார்.

இவர் தூங்குதமாறி தெரியலையேடே என்று எண்ணியபடி படிக்கட்டில் மெதுவாக இறங்கலாம் என்று போனால் வாசலில் ஆறுமுகசாமியின் பரம வைரி செந்தில் அண்ணன் உக்காந்து பாதி தூக்கத்தில் "rate of reaction increases with increase in temperature" என்று காற்றில் படம் வரைந்து கொண்டிருந்தார். சாமி திடீரென்று " எலே மாரியப்பன் சார் நெசம்மாவாடே படத்துக்கு பேட்டு இங்க வாரேன்னு சொன்னாரு " என்றான். அது என்னவென்று புரிந்து நான் சுதாரிப்பதற்குள் செந்தில் அண்ணா எங்களை நோக்கி "முதல்லே சொல்ல கூடாதாடே அவர் பன்னெண்டு மணிக்கு மேல நாங்க முழிச்சிருக்கத பாத்தா கொன்னே போட்டுருவாரு" என்று கூறி விட்டு வேகமாக புத்தகத்தை மடித்து வைத்து விட்டு ஆறுமுகசாமியை நோக்கி சென்று விஷயத்தை கூறினார். அவர் நம்பாமல் எங்களிடம் கேட்டார். நான் ஆம் என்று தலையசைத்த பின்னர் அவரும் தூங்க சென்றார்.

நானும் சுவாமியும் சிறிது நேரம் தூங்குவது போல் நடித்து சுமார் அரைமணி நேரம் கழித்து வந்து பூட்டை திறந்தோம். சுவாமிநாதன் ஏற்கனவே அந்த பூட்டு எண்ணை ஆராய்ந்து வைத்திருந்தான். அது ஆல்பா பூட்டு எனவே சாவி கிடைப்பது எளிது என்று பின்னொரு நாள் கூறினான். அவனிடம் ஒரு சாவி லைப்ரரியே இருந்தது. உள்ளே புகுந்த நாங்கள் உள்வழியாக கதவை சாத்திவிட்டு தயாராக வைத்திருந்த மெழுகுவர்த்தியை ஏற்றினோம். டேபிளில் இருந்த குடுவையின் உள்ளே ஒரு சாவிகொத்து இருந்தது.

அதில் இருந்து ஒவ்வொரு சாவியாக எடுத்து டிராயரை திறக்க முயன்றோம். நான்காவது முயற்சியில் திறந்தது. உள்ளே கை விட்டு துழாவி ஒவ்வொரு கட்டாக ஆராய்ந்தோம். அந்த வாரம் தேர்வு நிகழும் மூன்று பாடங்களுக்கு மட்டுமே வினாத்தாள் இருந்தது. ஒவ்வொரு கட்டும் ஒரு பாலிதீன் பையில் சுற்றபட்டிருந்தது. ஒரே ஒரு விரல் மட்டும் உள்ளே நுழையும் அளவிற்கு அந்த பாலிதீன் பையில் துளையிட்டு , ஒரு விரலை உள்ளே நுழைத்து ஒரே ஒரு வினாத்தாளை மட்டும் விரலால் சுருட்டி வெளியே எடுத்தான் சுவாமி. நான் வாய்பிளந்து நின்றேன். எடுத்த வினாத்தாளை என்னிடம் கொடுத்து பத்திரப்படுத்த சொன்னான்.

இவ்வாறு ஒவ்வொரு கட்டில் இருந்தும் ஒரு வினாத்தாள் எடுத்த பின்னர் மெழுகுவர்த்தி நெருப்பில் அத்துளைகளை வாட்டி அடைத்தான். நான் இதற்குள் பயத்திலும் வேர்வையிலும் குளித்திருந்தேன். எல்லாவற்றையும் இருந்த இடத்தில் வைத்துவிட்டு "அவ்வளவுதாண்டே" என்று மெழுகுவர்த்தியை அணைத்த அடுத்த நொடி..........................கதவு தட்டப்பட்டது...

Saturday, August 1, 2009

பெரியசாமி கோயில்

முந்தலுக்கு செல்லும் பாதை எங்கள் பள்ளியை ஒட்டியே இருந்தது. நாங்கள் கிளம்பிய வேளையில் பள்ளியில் ஒருவரும் தென்படவில்லை. மிகவும் குறுகிய அந்த கரடுமுரடான பாதையில் சைக்கிளில் சென்றது எனக்கு புது அனுபவமாக இருந்தது. கண்ணனுக்கோ வேதனையாக இருந்தது. அவன்தானே சைக்கிள் மிதித்தான். அவனை வைத்து மிதிக்கும் அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை. ராஜேந்திரனும் ராஜாவும் மற்றொரு சைக்கிளில் மாறி மாறி ஒட்டி வந்தனர்.
முந்தலை சென்று அடைந்ததும் சிறிது இளைப்பாறி கொண்டோம். அது கோடை காலம் ஆதலால் முந்தலில் மிகவும் குறைவாகவே தண்ணீர் கொட்டியது. "பெரியசாமி கோயில்ல இன்னும் நெறைய தண்ணி ஓடும்டே" என்றான் ராஜா... கொஞ்சம் புளியங்காய் அடித்து தின்றுவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு கிளம்பினோம். முந்தல் தாண்டி சிறிது தூரம் வரை சைக்கிளில் செல்ல முடியும் என்று அங்கே ஒரு வயசாளி கூறினார்.

அது ஒரு ஒத்தையடி பாதை போல இருந்தது. ஒரு புறம் புதர் செடிகள் மறு புறம் பள்ளத்தாக்கு என்று திகிலாக இருந்தது அந்த பாதை.கண்ணன் நேர்த்தியாக சைக்கிள் ஓட்டினான்.ஒரு இடத்தில் பாதை முடிவுற்று சில வீடுகள் தென்பட்டன.அந்த வீடுகள் இருந்த இடத்தின் முகப்பில் "தமிழ்நாடு ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது" என்று எழுதி இருந்தது. "எலேய் இவங்க காட்டுவாசில்லா... இங்க நம்மள பிடிச்சு வச்சுருவாங்கடே" என்றான் கண்ணன். "அதெல்லாம் ஒண்ணும் செய்யமாட்டாக.. நம்மள விட இவுகதான் நல்லவக" என்றான் ராஜேந்திரன்..நாங்கள் அங்கு ஒரு வீட்டின் அருகே சென்று "சைக்கிளை இங்க நிறுத்திக்கிடுதோம்" என்று சொன்ன போது உள்ளே சாப்பிட்டு கொண்டு இருந்தவர் "எங்க வந்தீய? கஞ்சி குடிக்கியளா?" என்றார். "வேண்டாம் நாங்க பெரியசாமி கோயிலுக்கு வந்தோம்" என்றேன். "அப்டியா அப்டீன்னா இந்த தீப்பெட்டியும் சூடனும் எடுத்துட்டு போங்க.. போய் சூடம் ஏத்தி கும்பிட்டுட்டு வாங்க" என்றார். சரி என்று வாங்கி கொண்டேன்.

அங்கிருந்து சுமார் ஒரு மைல் தூரம் நடந்து சென்ற பின் எங்கள் கண் முன்னே விரிந்தது ஒரு கண்கொள்ளா காட்சி.. ஒரு பொட்டு வெயில் கூட நுழைய விடாமல் அடர்ந்த மரங்கள், அதற்கு நடுவே துள்ளிக் குதித்தோடும் ஒரு சிறிய ஆறு. அதை பார்த்த அந்நேரத்தில் நாங்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை..வேகமாக உடைகளை களைந்து விட்டு நீரில் குதித்தோம்..ஆற்றில் மீன்கள் வேறு எக்கச்சக்கமாக மிதந்தன.. நன்றாக குளித்த பிறகு பசி வயிற்றை கிள்ளியது...போட்டி போட்டு கொண்டு புரோட்டாவை காலி செய்தோம்..சிறிது நேரம் அங்கே விளையாடி விட்டு செல்லலாம் என்று நினைத்த போது "நாம மீன் பிடிச்சு சுட்டு தீம்போமா" என்றான் ராஜேந்திரன்.

ஒரு துண்டை எடுத்து அதன் இருபுறமும் ஆளுக்கு ஒருவராக நானும் ராஜாவும் பிடித்து கொண்டோம்.. கண்ணனை சுள்ளி பொறுக்கி வர சொல்லி விட்டு ராஜேந்திரன் மீனைச்சுட ஒரு இடம் தேர்ந்தெடுத்தான்.. ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறை இருந்தது.. அதன் மீது ஒரு காய்ந்த மரம் சாய்ந்து கொண்டு நின்றது...அந்த பாறையில் அமர்ந்து மீனை சூட தயார் ஆனான் ராஜேந்திரன்.. முதல் பிடியில் மூன்று மீன்கள் சிக்கின.."கொண்டாடே எப்டி இருக்குனு பாப்போம்" என்றான் ராஜேந்திரன்.அதற்குள் சிறிதாய் தீ வளர்த்திருந்தான் அவன்.
சிறிய மீனின் கழுத்தை திருகி தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்தான்..பின்னர் ஒரு குச்சியில் அதை குத்தி லேசாக தீயில் வாட்டினான்..அதற்குள் அந்த குச்சி தீப்பிடித்து எரிந்தது.."நான் கீழ போய் எதாச்சும் கம்பியும் உப்பும் முளவாத்த பொடியும் வாங்கிட்டு வாரேன்" என்று சொல்லி விட்டு ராஜேந்திரன் சென்றான். "அவன் சென்ற பிறகு தீ எரிக்கும் வேலையை கண்ணன் ஆரம்பித்தான்.. அப்போது ஆரம்பித்தது வினை.. சிறு சிறு குச்சிகளாய் ஆரம்பித்து மெதுவாய் பெரிய தடிகளை தீயினுள் எறிந்தான் புரோட்டா தின்ன கண்ணன்.
தீ மள மளவென பற்றி எரிந்தது.

நானும் ராஜாவும் காட்டுக்குள் சிறிது தூரம் நடக்க சென்றோம் ஆங்காங்கே யானைச்சாணம் தென்பட்டது..ஒரு இடத்தில் இருந்த சாணத்தை பார்த்து "இப்பந்தாம்ல போட்டு போயிருக்கு" என்றான் ராஜா. ஆம் அதில் புகை பறந்து கொண்டிருந்ததை பார்த்து பதறி."ஏலே அப்பம்னா அது இங்கதான எங்கயாச்சும் இருக்கும்" என்று நான் மெதுவாக வந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.. அவன் என்னை முந்திக்கொண்டு ஓட ஆரம்பித்தான்...ஓட்டமாய் ஓடி கண்ணன் இருந்த இடத்தை அடைந்த போது அங்கே ஒரு பெரும் பிரளயமே காத்து இருந்தது. அவன் பற்ற வைத்த நெருப்பு அந்த பாறையின் மீது சாய்ந்து நின்ற பெரிய காய்ந்த மரத்திலும் பற்றி கொண்டது. சிறிய மலை போல் தீ மள மளவென எரிந்து கொண்டிருந்தது.கண்ணன் கையை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்."எங்கல போனீய?"என்றான்.நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். அந்த மரத்தை சுற்றி மேலும் பல காய்ந்த மரங்கள் இருந்தன..அது வரை அவ்வளவு பெரிய தீயை நாங்கள் பார்த்ததே இல்லை.இந்த நெருப்பு தொடர்ந்தால் காட்டையே அழித்துவிடும் என்று தோன்றியது..இதற்குள் ராஜேந்திரனும் வந்து சேர்ந்திருந்தான்.."கெடுத்துபுட்டியே கதைய" என்றான் கண்ணனை நோக்கி..நாங்கள் என்ன செய்வதென்று கையை பிசைந்து கொண்டிருந்தோம்.

ராஜேந்திரன் வேகமாக ஓடி சென்று ஆதிவாசிகள் குடியிருப்பில் கண்ட அந்த பெரியவரை அழைத்து வந்தான். "என்ன வேலைய்யா பாத்து வெச்சுருக்கீக" என்று புலம்பிகொண்டே அந்த நெருப்பின் அருகே சென்றார்..சில வினாடிகள் யோசித்து விட்டு மரத்தின் அடிப்பாகத்துக்கு அருகே சென்றார்.அதை சுற்றி இருந்த சருகுகளை ஒரு பெரிய கம்பால் விலக்கிவிட்டு மெதுவாய் அந்த மரத்தின் அடிப்பாகத்தை லேசாக தள்ள முயற்சித்தார்..எங்களால் அதன் அருகில் கூட செல்ல ஏலவில்லை.வெக்கை கடுமையாக இருந்தது. அவர் முழு மூச்சுடன் மரத்தை தள்ளினார் அது மெதுவாக உருண்டு ஆற்றுக்குள் பெருத்த சத்தத்துடன் விழுந்தது.. சிறிது நேரம் மூண்ட புகையில் எங்களுக்கு கண்ணே தெரியவில்லை.கொஞ்ச நேரத்தில் புகையும் நெருப்பும் அடங்கி அந்த இடமே நிசப்தமானது போல தோன்றியது.

"உங்க யாருக்கும் கை பொக்கலல்லா?" என்றார் அவர்..கண்ணனுக்கு மட்டும் லேசாக கையில் சூடுபட்டிருந்தது. அவனை கூட்டிப்போய் ஏதோ பச்சிலை அரைத்து கையில் கட்டி விட்டார். எனக்கு எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது போல் இருந்தது.
ஏதோ ஒரு இனம்புரியாத மௌனம் எங்களிடையே புகுந்திருந்தது.அங்கிருந்து சைக்கிள் எடுத்துக்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பினோம்.கண்ணனை பின்னால் உட்கார வைத்து நான் ஒட்டி கொண்டு வந்தேன். நல்ல இறக்கம் ஆதலால் சுளுவாக ஒட்டி கொண்டு வந்தேன். அதன் பிறகு நாங்கள் முந்தலுக்கு போகவே இல்லை.