Saturday, July 25, 2009

The journey begins...

"நாளைக்கு பெரியசாமி கோயிலுக்கு போவலாமா?" என்றான் ராஜா. "அது எங்கலே இருக்கு?" என்றேன் நான். "அது முந்தல் மலைக்கு மேல இருக்குடே" என்றான் பின் சீட்டில் இருந்து ராஜேந்திரன். எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது மேற்குத்தொடர்ச்சி மலை. அதில் ஒரு குன்றுதான் முந்தல் மலை. அதற்கு முன்பு பல முறை முந்தல் மலைக்கு சென்றிருக்கிறோம். ஒரு முறை கெமிஸ்ட்ரி ஹோம் வொர்க் எழுதாமல் வந்ததால் நானும் ராஜேந்திரனும் காலையிலேயே கிளம்பி முந்தலுக்கு போய் குளித்து கொண்டாடிவிட்டு கிளம்பி வீட்டுக்கு போனோம்.
மேற்கு தொடர்ச்சி மலைக்குள் அதைத்தாண்டி நான் சென்றதில்லை.
"நான் ஒரு தடவை போயிருக்கேம்ல சூப்பரா இருக்கும் " என்றான் ராஜா. "ஆனா அதுக்கு முந்தல் வரைக்கு சைக்கிள்ல பேட்டு அங்கேருந்து நடந்து போணும்டே " என்றான் ராஜேந்திரன் . "ஓங்கிட்ட துட்டு இருக்கா? " என்று கேள்வி என்னை நோக்கி திரும்பியது. "எதுக்குலே? சைக்கிளுக்கா ?".. "சைக்கிளுக்கு வேணும் பெறவு திங்க எதாச்சும் வாங்கிட்டு போணும்லா ".."ஆமா அங்க போய் குளிச்ச பெறவு தீயா பசிக்கும்லே ".. "இத வீட்ல சொல்லி துட்டு கேட்டா எங்கம்மா கொன்றுவா.. நான் வேணும்னா ரொட்டி வாங்கியாறேன்டே எங்க ஊரு சென்ட்ரல்ல ரொட்டி-சால்னா சூப்பரா இருக்கும் நம்ம நாலுவேறு தான? பன்னெண்டு புரோட்டா வாங்கியாறேன்" என்றேன். "சேரி அப்டின்னா சைக்கிளுக்கு நாங்க காசு போடுதோம்" என்று ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம்.அதன் பிறகு அவர்கள் தங்கள் முந்தய பயணத்தின் வீர பிரதாபங்களை சிலாகித்து பேசிக்கொண்டு இருந்தனர். நான் பன்னெண்டு புரோட்டாவுக்கு எப்படி அடி போடுவதென்று யோசித்து கொண்டிருந்தேன். மறு நாள் காலை ஏழுமணிக்கே கிளம்பி விட்டேன். "ஏலே நீ பள்ளிக்கூடம் போவ ஆரம்பிச்ச நாள்ல இருந்து ஏழு மணிக்கு இன்னைக்குதாம்ல கெளம்பி இருக்க.." என்றாள் அம்மா... கிளம்புவதற்கு முன் என் பழைய டவுசருக்குள் ஏதேனும் காசு இருக்குமா என்று தேடி கொண்டிருந்தேன். "என்னத்துக்குல இப்டி தட்டளிஞ்சிகிட்டு கெடக்க " என்றாள் அம்மா .. "
"திங்க எதாச்சும் இருக்கா? " என்றேன். "ஏழு மணிக்கு நான் என்ன செய்யட்டும் என்றாள். "அப்டின்னா நான் போம்போது ரொட்டி வாங்கிட்டு போறேன் " என்றேன். "செத்த இரு உங்கப்பா வயலுக்கு பேட்டு வந்த பெறவு வாங்கி தாரேன். என்ன கொள்ளையா போவுது" என்றாள். "நான் சீக்கிரம் போணும் இல்லாட்டி ரிகர்சல் ஆரம்பிச்சுருவாங்க" என்று புலம்பினேன். உடனே எங்கிருந்தோ தேடி கொஞ்சம் சில்லரையாக கொண்டு வந்து கொடுத்தாள்.மொத்தம் பத்துரூபாய் ஐம்பது காசு தேறியது.
அவசர அவசரமாக கிளம்பி பஸ் ஸ்டாண்ட் சென்றேன்.பஸ் ஸ்டாண்டின் (ஆஸ்பத்திரி ஸ்டாப்) அருகில்தான் சென்ட்ரல் புரோட்டா ஸ்டால் இருந்தது. அங்கே சென்றால் அப்போதுதான் புரோட்டா போட மாவு பிசைந்து கொண்டிருந்தார் இல்லியாஸ் அண்ணாச்சி. சேரி இது வேலைக்கு அவாது என்று எண்ணியபடி புளியங்குடி பஸ்ஸை பிடித்தேன்.
திட்டமிட்டபடி எல்லோரும் 7:45 க்கு புளியங்குடி கட்டபொம்மன் பஸ் டிப்போ அருகே குழுமினோம். மொத்தம் முப்பத்தி இரண்டு ரூபாய் தேறியது . இரண்டு சைக்கிள் வாடகைக்கு எடுப்பதாக திட்டமிட்டோம்...
"ஆள் தெரியாட்டி ஒருத்தரும் சைக்கிள் தரமாட்டாங்க " என்றான் ராஜேந்திரன்...."பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு கடை எனக்கு தெரியும்ல..அது எங்க தாத்தா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கடைதான் ..." என்றான் ராஜா... "அது ஒரு மைல் தூரம்லாடே இருக்கு.. பஸ்ல போனா துட்டும் காணாது.. வா நடந்து போவோம் நம்ம ரெண்டு பெரும் போய் எடுத்துட்டு வருவோம், மீதி துட்டுக்கு இவங்க ரெண்டுபேரும் போய் ரொட்டி வாங்கிட்டு வரட்டும்...வெள்ளதுரைல போய் வாங்குங்கடே அங்கதான் நெறையா சால்னா குடுப்பான்" என்று அவர்களிடம் சொல்லும்போது, "நீங்க நேத்தே சொல்லி இருந்தா நான் சுங்காமுத்துல வாங்கிட்டு வந்திருப்பேன்டே, அங்கதான் சால்னா சூப்பரா இருக்கும்" என்றான் கண்ணன்...காலை வெயில் தார் ரோட்டை ஏற்கனவே உருக வைத்திருந்தது... ராஜா செருப்பு அணிந்திருக்கவில்லை.. நானும் அவனும் மாறி மாறி என்னுடைய செருப்பை போட்டு கொண்டு சென்றோம்...புளியங்குடி பஸ்ஸ்டாண்ட் அருகே ஒரு சைக்கிள் கடையில் நாள் வாடகைக்கு ரெண்டு சைக்கிள் (அரை வண்டி) எடுத்துக் கொண்டோம்... சத்தியமாக அன்றுதான் ரோட்டில் இடது பக்கம் சைக்கிள் ஒட்டி செல்ல வேண்டும் என்று எனக்கு தெரியும்...ராஜாதான் சொன்னான்...ராஜாவை என்னுடன் அழைத்து சென்றதில் வேறோர் சூட்சுமமும் இருந்தது. ராஜாவையும் கண்ணனையும் புரோட்டா வாங்க அனுப்பியிருந்தால் புரோட்டாவை நாங்கள் வருவதற்குள் காலி செய்திருப்பார்கள்...
கண்ணனும் ராஜேந்திரனும் புரோட்டாவுடன் ரெடியாக இருந்தனர்... பெரியசாமி கோயில் நோக்கிய எங்கள் பயணம் இனிதே துவங்கியது..

Friday, July 24, 2009

ஆண்டு விழா

அப்பொழுது நான் ஏழாவது படித்ததாக நினைவு. எங்கள் ஊரிலிருந்து 15 கி. மீ தூரத்தில் உள்ள புளியங்குடியில் உள்ள பள்ளியில்தான் நான் பயின்று வந்தேன். தூர்தர்ஷனின் ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை தமிழ் படங்கள், திருவிழாக்காலங்களில் 16 mm திரைப்படங்கள் (ஒவ்வொரு திருவிழாவிற்கும் இரண்டு திரைப்படங்கள் ஒரு பக்தி படம் ஒரு பாக்யராஜ் படம்! ) ஆகியவற்றை தவிர்த்து எங்கள் கலை தாகத்தை தீர்த்துக் கொள்ள ஒரே வடிகால் எங்கள் பள்ளியின் ஆண்டுவிழா.

அதற்கு ஆள் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய வேலை. 'கரகாட்டக்காரன்' பாட்டுக்கு ஆடுவதற்கு முதலில் மலாக்கி சார் அழைத்து சென்று 'மாங்குயிலே பூங்குயிலே' பாட்டுக்கு என்னை ஆட சொன்னார். நானும் பாடல் ஆரம்பித்தத்தில் இருந்து இரண்டு கைகளையும் தூக்கி இறக்கி ஒரே ஸ்டெப்பை போட்டு கொண்டிருந்தேன் (18 முறை என்று பாண்டி சொன்னான்). சரி இது வேலைக்கு ஆவாது என்று குழு நடனம் ஆடும் அணிக்கு என்னை அனுப்பி வைத்தார். அங்கு ஏதோ ஒரு ரஜினிகாந்த் பாட்டிற்கு ஆடி பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து ஆடினேன். அன்றைய பயிற்சி முடிந்து வெளியே செல்லும் முன் பத்மா மிஸ் என்னை கூப்பிட்டு "சிவப்பு சட்டை வாங்குறதுக்கு நாளைக்கு 75 ரூவா கொண்டு வந்துரு" என்றார்கள். "75 ரூவாயா? 75 பைசா கூட கெடயாது" என்றார் எங்கப்பா. சரி போகுது இந்த வருஷமும் நாடகத்திலேயே நடிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன்.

படிப்பில் படுகெட்டி என்று ஆரம்பித்து சராசரி மாணவன் என்ற பட்டத்தை நோக்கி நான் பயணிக்க ஆரம்பித்த காலம் அது. ஆண்டுதோறும் நாடகங்களில் முக்கிய வேடம் என்று ஆரம்பித்து , தேய்ந்து ஒன்பதாம் வகுப்பில் ஒரு ஆங்கில நாடகத்தில் சேவகனாக ஒரே ஒரு காட்சியில் வந்து சென்றேன். முதல் ரேங்க் மாணவனே முக்கிய நாயகன் என்னும் வினோத பழக்கத்தை கொண்டிருந்தது எங்கள் பள்ளி. எட்டாம் வகுப்பில் மொத்தமாய் பன்னிரெண்டு கிலோ இருந்த எனக்குத் தளபதி வேடம் கொடுத்தனர். பெரியதாக மீசை வேறு. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சுனா பானா போல் இருந்திருக்கிறேன். அந்த வருடம் (ஏழாம் வகுப்பு) ஆண்டு விழா நாடகத்தில் நானும் ராஜாவும் முக்கிய வேடம் ஏற்றிருந்தோம். ராஜா பணக்கார ஊதாரி தந்தை, நான் அவரை திருத்தும் ஒழுக்க புத்திரன். ஆண்டு விழா அன்று பள்ளி விடுமுறை. எங்கள் அனைவரையும் பயிற்சிக்காக காலையிலேயே வர சொல்லி இருந்தனர். அதற்கு முந்தைய நாள்தான் நானும் ராஜாவும் ஒரு திட்டம் தீட்டினோம்.

முன்னோட்டம்

ஒவ்வொரு பண்பட்ட மனிதனும் தான் இடம்பெயரும் பொழுது தன்னுடன் தான் வசித்த இடத்தின் நினைவுகளையும் கலாசாரத்தின் சுவடுகளையும் சுமந்தே செல்கிறான். காலப்போக்கில் தான் வசிக்கும் இடத்திற்கும் வசித்த இடத்திற்கும் ஏற்படும் இடைவெளி விரிந்து கொண்டே செல்கிறது. ஒரு நாகரீகத்தின் பிம்பம் மற்றொரு இடத்தில் ஏதேனும் ஓர் வகையில் பிரதிபலிப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர். மதுரை பற்றி எரியும் முன்னர் அங்கிருந்து புலம்பெயர்ந்தோர் கேரளத்தின் ஓர் பகுதியில் குடியேறி வாழையடி வாழையாக (தென்னையடி தென்னையாக) வாழ்ந்து வருவதாகவும், இருவருக்கும் இடையே நிலவும் பல்வேறு கலாசார ஒற்றுமைகள் இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நான் வசித்து, சுவாசித்து, வாழ்ந்த மண்ணின் நினைவுகளையும், சந்தித்த மனிதர்களின் சுவடுகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், அடடா இது என் இளம்பிராயம் போல் உள்ளதே என்று உங்களை உங்களுக்கே நினைவுபடுத்தவும் என் சிறு முயற்சி இது. இதை படிக்கும் ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் பழைய நண்பனையோ , உங்கள் பெற்றோரின் கைகோர்த்து நடந்த நாட்களையோ நீங்கள் நினைவுகூர்ந்தால் அது என் எழுத்தின் வெற்றி.

நான் பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் என்னும் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஓர் ஊர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் முகில் கூட்டங்கள் முடியும் இடத்தில் துவங்கும் ஓர் அற்புத உலகம் அது. என் நினைவுகளின் ஊடே நான் நடந்து உங்களையும் நடத்தி செல்லும் போது இது குறித்து மேலும்...